டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் - இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் - இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் - இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது 

டெல்லியில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழாக பதிவாகி வந்த நிலையில் அது தற்போது 300 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 1,103 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் விகிதம் 0.55 ஆக அதிகரித்த நிலையில் ஏற்கனவே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒமைக்ரான் வகை தொற்றும் வேகமாக பரவி வரும் நிலையில் தலைநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள், பார்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படவும், பொது இடங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கக்கூடிய நிலையில் தலைநகர் டெல்லியில் வருகிற 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் அலையில் கடும் பாதிப்பை சந்தித்த டெல்லி ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இன்றைய தேதி படி தலைநகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 279 ஆக உள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com