சுரங்க விபத்து: தொடரும் தாமதம், என்ன நடக்கிறது மேகாலயாவில்?

சுரங்க விபத்து: தொடரும் தாமதம், என்ன நடக்கிறது மேகாலயாவில்?

சுரங்க விபத்து: தொடரும் தாமதம், என்ன நடக்கிறது மேகாலயாவில்?
Published on

மேகாலயா சுரங்க விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி, தொடர்ந்து தாமதமாகி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேகாலயாவில் ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 15 பேர் சுரங்கத்தினுள் இருந்து வெளிவர முடியாமல் சிக்கினர்.

அவர்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த நூறு பேர், அப்பகுதியில் முகாமிட்டு அவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண் டு வந்தனர். கடந்த 24 ஆம் தேதி மழை பெய்ததால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. சுரங்கத்துக்குள் தண்ணீர் வற்றாததாலும் நீரை வெளியேற்ற சக்தி வாய்ந்த பம்புகள் இல்லாததாலும் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் அனுபவம் வாய்ந்த 21 பேரை கொண்ட ஒடிசா தீயணைப்பு வீரர்கள், நவீன இயந்திரங்களுடன் மேகாலயா சென்றுள்ளனர். அவர்கள், நீரை வெளியேற்றும் அதிக சக்திவாய்ந்த இழுவைத் திறன் கொண்ட 20 பம்புகளையும் கொண்டு சென்றுள்ளனர். 

’’இந்த பம்புகள் நிமிடத்துக்கு 1,600 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் சக்தி கொண்டது. சுகந்தா சேதி தலைமையில் வந்துள்ள இந்த மீட்புக் குழு அனுபவம் வாய்ந்தது. சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை விரைவில் மீட்டு விடுவோம்’’ என்று தீயணைப்புத் துறை இயக்குனர் ஜெனரல் பி.கே.சர் மா தெரிவித்தார்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்ட அந்த வீரர்கள் நேற்று காலை 11.30 மணிக்கு அஸ்சாம் மாநிலம் குவாஹட்டி சென்றடைந்தனர். ஆனால், மேகாலயாவில் சுரங்கம் அமைந்துள்ள இடம், அங்கிருந்து 220 கி.மீ தூரத்தில் உள்ள தால் அதற்கான வாகன ஏற்பாடுகளை அம்மாநில அரசு உடனடியாக செய்யவில்லை.

காலையில் வந்த வீரர்கள் மாலை 5.45 மணி வரை காத்திருந்தனர். பின்னர் உபகரணங்களுடன் லாரிகளில்  சென்ற அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். சுரங்கத்துக்கு 25 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளி அது. அங்கு மேகாலயா அரசு சார்பில் வீரர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. உணவோ, குளிருக்கான போர்வைகளோ எதுவும் கொடுக்கப்படவில்லை.


 
‘’இதுபோன்ற குளிரை எங்கள் மாநிலத்தில் சந்திக்காததால் அவசரத்தில் நாங்கள் எதையும் எடுத்து வரவில்லை. இருந்தாலும் சுரங்கத்தில் சிக்கி யுள்ளவர்களை மீட்க செல்ல ஆர்வமாக இருக்கிறோம். இன்று காலை 8 மணி ஆகிவிட்டது. எங்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை வரவில்லை. இதில் என்ன ஆச்சரியம் என்றால், எங்களை ஒருங்கிணைக்க மேகாலயா அரசு சார்பில் எந்த அதிகாரியும் இல்லை’’ என்று இந்தக் குழுவை வழி நடத்தும் தலைமை தீயணைப்பு அதிகாரி சுகந்த் சேதி தெரிவித்துள்ளார். 

இதுபற்றி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், மேகாலயா மாநில கூடுதல் தலைமை செயலாளர் பிடபிள்யூ இங்டியிடம் தொலைபேசியில் கேட்ட போது, ‘’அந்த குழு, இப்போது அங்கிருந்து கிளம்பிவிட்டது. சுரங்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வேறு எதுவும் இப்போது எனக்குத் தெரியாது’’ என்றார்.

சுரங்கம் அமைந்துள்ள கிழக்கு ஜைன்டியா மாவட்ட போலீஸ் அதிகாரி சில்வஸ்டர் நாங்ட்கரிடம், ஹெலிகாப்டரில் அங்கு வர ஹெலிபேட் ஏதும் இல்லையா? என்று கேட்டபோது, ‘’இங்கு வருவதற்கு சாத்தியமான இடங்களை நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீங்கள் மாவட்ட கலெக்டரிடம் கேளுங்கள்’’ என்றார்.

சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும், இதுவரை அதிகாரிகளோ, அமைச்சர்களோ யாரும் அந்தப் பகுதிக்கு செல்லவில்லை என்கிறார்கள், அந்தப் பகுதியினர். இதனால் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com