உலக சாதனை படைக்கும் முயற்சியாக பிரம்மாண்டமான சாண்டா கிளாஸ் சிற்பத்தை சிற்பி சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் என்றால் சாண்டா கிளாஸ் என்ற ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ தான் நினைவுக்கு வரும். ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ ஆடை அணிபவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிசுகள் வழங்குவர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரம்மாண்ட ‘சாண்டா கிளாஸ்’ சிற்பத்தை வடிவமைத்துள்ளார். ஒடிசாவின் பூரி கடற்கரையில் இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பாட்டில்களால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் 30 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டது.
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதனை அவர் வடிவமைத்தார். இதற்காக அவர் 800 டன் மணல், 10 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தியுள்ளார். இந்தப் பணியில், அவருடைய பயிற்சி மையத்தில் பயிலும் 40 மாணவர்களும்ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஏசு கிறிஸ்து மற்றும் மேரியின் பிரம்மாண்ட மணல் சிற்பத்தையும் பூரி கடற்கரையில் அவர் வடிவமைத்து இருந்தார். இதனை, ஏராளமான மக்கள் கண்டு களித்து செல்கின்றனர்.