ரெட் அலர்ட்| 6 மாநிலங்களில் பொளக்கப்போகும் கனமழை! 40% நிலத்தை மிரட்டும் கருமேகங்கள்!
வடஇந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மணிக்கு 15 மி.மீ வரை மழை, பலத்த காற்று, சில இடங்களில் கனமழை ஏற்படும். டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் 40% நிலப்பரப்பில் மழை பரவலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
தமிழகத்தில் மட்டும் தான் வடகிழக்கு பருவமழை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், தமிழகத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை தான் அதிகப்படியான மழைப்பொழிவை தருகிறது. ஜூன் மாதம் தொடங்கும் இந்த பருவகாலம், செப்டம்பர் மாதம் இறுதி வரை இருக்கும். குறிப்பாக, ஆகஸ்டு மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அந்த வகையில், தற்போது வடமாநிலங்களில் கடுமையான மழைப்பொழிந்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லி-க்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நொய்டா, குருகிராம் உள்ளிட்ட என்.சி.ஆர் மண்டலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, நகரின் பல பகுதிகளில் மணிக்கு 15 மி.மீ வரை மழையும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமான கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழையின் அச்சுக்கோடு டெல்லிக்கு மேலே கடந்து செல்வதே இந்த மழைக்கு முதன்மை காரணம் என்றும், கிழக்கத்திய காற்றின் தாக்கத்தால் டெல்லி-என்சிஆர், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வார இறுதி நாட்களில் மிதமான மழை பெய்யும் என்றும், கூறப்படுகிறது.
மேலும், ஒட்டுமொத்தப் பகுதியிலும் ஒரே சீராக இல்லாமல், 40% பரப்பளவு நிலத்தில் மழைப்பொழிவு பரவலாக இருக்கும் என்றும், வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த மழைப்பொழிவின் காரணமாக, டெல்லியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழே குறைந்திருப்பதோடு, காற்றின் தரம் மிதமான அளவில் உயர்ந்திருப்பது தான், ஒரே நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. இந்த மழையின் காரணமாக காற்றின் தரம் மீண்டும் சீரடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

