பஞ்சாயத்து ராஜ் நாயகன்.. ராமகிருஷ்ண ஹெக்டே நூற்றாண்டு: வரலாறும் நினைவுகளும்!!
கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை, சிறந்த பேச்சு, நுட்பமான நகைச்சுவை உணர்வு மற்றும் தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர் ராமகிருஷ்ண ஹெக்டே. சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் தன் போராட்ட வாழ்கையை தொடங்கியவர். காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய ஹெக்டே, 1969 கட்சிப் பிளவுக்குப் பின் காமராஜர் உள்ளிட்டோரால் தொடங்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். 1975 - 77 அவசரநிலைக்குப் பிறகு ஜனதா கட்சியில் இணைந்தார். 1980களின் இறுதியில் ஜனதா தளம் உருவாக முக்கியப் பங்காற்றிய இவர், 1983இல் கர்நாடகாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் என்ற பெருமையை பெற்றார். பின்னர் உட்கட்சிப் பூசலால் நீக்கப்பட்டதும், 1997இல் லோக் சக்தி கட்சியைத் தொடங்கினார்.1999இல் அந்தக்கட்சி ஐக்கிய ஜனதா தளத்துடன் ஐக்கியமானது. வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய வர்த்தக அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.
இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் அதிகாரத்தைப் பரவலாக்கி, கிராமப்புற அடித்தட்டு மக்களுக்கு ஆட்சியைக் கொண்டு சேர்த்ததே இவரது முதன்மையான வரலாற்றுப் பங்களிப்பாகும். ராமகிருஷ்ண ஹெக்டேவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் தனது நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ஏர் டெக்கான் அளித்த இலவச சேவையை வளரும் தொழிலதிபருக்கு ஒவ்வொரு ரூபாயும் முக்கியம் எனக் கூறி மறுத்த ராமகிருஷ்ண ஹெக்டேவின் தாராள மனதை பற்றி பேசியுள்ளார். போலித்தனமில்லாத வாழ்வு, அதிகாரச் செருக்கிற்கு பணியாத துணிவு கொண்ட உண்மையான கனவான் ராமகிருஷ்ண ஹெக்டே என கோபிநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

