தூர்தர்ஷனில மறுஒளிபரப்பாகும் 'ராமாயணம்' தொடர் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி 7 கோடியே 70 லட்சம் பார்வையாளர்களை கடந்து உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்ற சாதனை படைத்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வீட்டிலிருக்கும் மக்களின் பொழுதுபோக்கிற்காக ராமநாத் சாகர் இயக்கிய பிரபல ராமாயணம் நாடகத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் மறுஒளிபரப்பு செய்து வருகிறது. இது குறித்து தெரிவித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ராமாயணா நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்படும். இந்நிகழ்ச்சி மார்ச் 28 முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். நிகழ்ச்சியின் ஒரு பகுதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மற்றொரு பகுதி மாலை 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்படும்”என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து ராமாயணம் நாடகம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் அந்த சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் 16 ஆம் தேதி 7 கோடியே 70 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ராமாயணம் தொடர், உலகிலேயே அதிக நபரால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்ற சாதனை படைத்துள்ளது.
தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் ராமாயணம் 1987ம் ஆண்டு முதன்முதலாக ஒளிபரப்பானது. ஜனவரி 25, 1987 முதல் ஜூலை 31, 1988 வரை இந்த நாடகம் ஒளிபரப்பானது. ஒவ்வொரு ஞாயிறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பான இந்த நாடகம், 78 வாரங்களில் நிறைவுபெற்றது.