கிரண்பேடி வருத்தம் தெரிவித்துவிட்டார் - டி.ஆர்.பாலு கேள்விக்கு ராஜ்நாத்சிங் பதில்

கிரண்பேடி வருத்தம் தெரிவித்துவிட்டார் - டி.ஆர்.பாலு கேள்விக்கு ராஜ்நாத்சிங் பதில்
கிரண்பேடி வருத்தம் தெரிவித்துவிட்டார் - டி.ஆர்.பாலு கேள்விக்கு ராஜ்நாத்சிங் பதில்

தண்ணீர் பிரச்னை விவகாரத்தில் தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது எனவும் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் கிரண்பேடி விமர்சித்திருந்தார். மேலும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

கிரண்பேடியின் இந்தக் கருத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். கிரண்பேடியின் இந்தப் பேச்சுக்கு சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், கிரண்பேடியின் கருத்து பற்றி மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், “புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். யாரையும்  காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கருத்து பதிவிடவில்லை. எதிர்ப்பு எழுந்தவுடன் உடனடியாக அதனை நீக்கிவிட்டேன்” என கிரண்பேடியின் விளக்கத்தை அவர் வாசித்தார்.

கிரண்பேடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் அதே கோரிக்கையை  விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com