"நான் ஒரு விடாமுயற்சியுள்ள மாணவன், ஸ்கூல் டாப்பர், ஒரு க்ளாஸ் லீடரும் கூட!" ரஜினி பேசிய வீடியோ வைரல்
”பெங்களூர் பள்ளியில் நான் டாப்பர்’ வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ...
பெங்களூரில் தான் படித்த ஆச்சார்யா படாஷாலா (ஏபிஎஸ்) உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில், கலந்துக்கொள்ள முடியாத நடிகர் ரஜினிகாந்த், தற்பொழுது தாய்லாந்தில் ஒரு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அங்கிருந்தபடி, தனது முன்னாள் நண்பர்களுக்காக கன்னட மொழியில் பேசிய வீடியோ ஒன்றை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
அதில், தனது ஆரம்பக் கல்வியை கவிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கவி கங்காதரேஸ்வரா கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் படித்ததை கன்னட மொழியில் நினைவு கூர்ந்துள்ளார்.
பிறகு தனது பள்ளி நாட்கள் நண்பர்களை நினைவுக்கூர்ந்ததுடன், இந்த நிகழ்வைத் தவறவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த சூப்பர் ஸ்டார், “உங்கள் அனைவருடனும் நானும் கலந்துக்கொள்ள நினைத்தேன்.. கலந்துக்கொண்டிருந்தால் எனக்கு அது மறக்கமுடியாத அனுபவமாக இருந்திருக்கும். நான் ஒரு விடாமுயற்சியுள்ள மாணவன், ஸ்கூல் டாப்பர், ஒரு க்ளாஸ் லீடரும் கூட...," என்று பெருமையுடனும் நன்றியுடனும் பேசும் பொழுது அவரது கண்களில் பெருமிதம் தெரிந்தது.
நடுநிலைப் பள்ளியில் 98 சதவீத மதிப்பெண்களுடன் சிறந்து விளங்கிய அவர், உயர்கல்வியை கற்க ஏபிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளார். அது ஆங்கில வழிகல்வியாததால் அது அவரை மன அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது
அங்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் தனது போராட்டங்களை நினைவு கூர்ந்த அவர் "முன் பெஞ்சில் டாப்பராக இருந்து, கடைசி பெஞ்சில் முடித்தேன்" என்று ஒப்புக்கொண்டார். மொழித் தடை எவ்வாறு பாடங்களைத் தொடர்வதை கடினமாக்கியது என்பதைப் பகிர்ந்து கொண்ட அவர், "ஆங்கிலத்தில் பாடங்களைப் பின்பற்றுவது கடினமாக இருந்ததால் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன்" என்று கூறினார். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தனக்கு பெரிதும் உதவியதாகவும், இறுதியாக ஆங்கிலம் கற்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.