இளைஞர்கள் அனைவரும் இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இமயலை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் நேற்று ரிஷிகேஷ் சென்றிருந்தார். அங்கு அவரிடம் பகுதி நேர அரசியல்வாதி என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, தாம் இன்னமும் முழுமையான அரசியல்வாதியாகவில்லை என்று மட்டுமே குறிப்பிட்டதாக விளக்கினார். தமது இமயமலை பயணத்திற்கும், அரசியலில் தாம் நுழைவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முன்பு நான் ஒவ்வொரு வருடமும் வருவேன். கடந்த 7-8 ஆண்டுகளாக பல காரணங்களால் என்னால் வர இயலவில்லை. அதனால் நான் தற்போது இங்கு வந்துள்ளேன். இது வழக்கமான ஒன்றுதான். உங்களுக்கு இமயமலை பற்றி நான் சொல்லத் தேவையே இல்லை. இந்த இடத்தையும், கங்கை நதியையும் நான் நேசிக்கிறேன். இங்கு நிறைய புனிதர்கள் உள்ளனர். அவர்களிடம் ஆசி பெற்று என்னை புதுப்பித்துக்கொள்ளவே வருகிறேன். இது வழக்கமான ஒன்றுதான். இதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம். இளைய தலைமுறை கடவுள் மீதான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அது மிக முக்கியமானது. கடவுள் மீது முழு நம்பிக்கை வைக்க அவர்களது பெற்றோரும், ஆசிரியரும் கற்றுத்தரவேண்டும். இதுவே இளைய தலைமுறைக்கு என் வேண்டுகோள்” என்று கூறினார்.