தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு !

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு !
தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு !

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், லட்சத்தீவு மாலத்தீவு கேரள கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாலும் மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் வரும் ஜூன் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 சென்டிமீட்டர் மழையும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் 8 சென்டி மீட்டர் மழையும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 5 சென்ட்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com