‘3 லட்சம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு?’ - மத்திய ரயில்வே விளக்கம்
சுமார் 3 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை மத்திய ரயில்வே மறுத்துள்ளது.
ரயில்வேயில் பணியாற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்களையும், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நபர்களின் விவரங்களையும் ரயில்வே நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பட்டியலைத் தயார் செய்யும்படி ரயில்வே அமைச்சகமும், ரயில்வே வாரியம் அனைத்து மண்டலத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவின. அதிகாரப்பூர்வமற்ற செய்தியால் மூத்த ஊழியர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்ப்பு அதிகாரி, கட்டாய ஓய்வு என்று பரவும் செய்தி தவறானது என்றும் ரயில்வே ஊழியர்களின் செயல்பாடுகளை திறனாய்வு செய்யும் வழக்கமான நடைமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விளக்கமளித்துள்ளார்.