நீங்கள் டீ பிரியரா? தொலைதூர ரயில் பயணத்தை சூடான டீயுடன் ரசிப்பவரா? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுக்கலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலானது. மே 1ஆம் தேதி புனித் தியாகி ( Punit Tyagi) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அந்த வீடியோதான் ரயிலில் டீ குடிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், தெலங்கானா பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில்ஒரு ரயில் நிற்கிறது. நீள நிற உடை அணிந்திருக்கும் ஒருவர் ரயில் கழிவறையில் உள்ள பைப்புகளில் வரும் தண்ணீரை டீ கேன்களில் நிரப்பிக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த கேன்களை ரயிலில் டீ விற்கும் ஊழியர்களிடம் வழங்குகிறார். இந்த வீடியோதான் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை முதன்முறையாக பார்ப்பவர்களுக்கு இது அதிர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் இந்த வீடியோ, ரயிலில் விற்கப்படும் டீயின் தரத்தை கூறுவதாக உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த வீடியோ சென்னை சென்ட்ரலில் இருந்து - ஐதராபாத் (Chennai Central-Hyderabad Charminar Express) செல்லும் சார்மினர் விரைவு ரயிலில் எடுக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத் - காசிபேட்டுக்கு இடைப்பட்ட பிரிவின் ஒப்பந்ததாரரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பத்தப்பட்ட டீ விற்பனையாளர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து லைசென்ஸையும் ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.