புலம்பெயரும் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணத்தை வசூலித்ததா ரயில்வே நிர்வாகம் ?

புலம்பெயரும் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணத்தை வசூலித்ததா ரயில்வே நிர்வாகம் ?
புலம்பெயரும் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணத்தை வசூலித்ததா ரயில்வே நிர்வாகம் ?

குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து உத்தரப் பிரதேசம் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ரூ.630 மதிப்புள்ள பயணச் சீட்டு ரூ.800-க்கு விற்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

பொது முடக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். அவர்களுக்கென பிரத்யேக ஷராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்குத் திரும்பும் தொழிலாளர்கள்தான் அதிகம். மேலும், இந்தச் சிறப்பு ரயிலில் பயணம் செய்வதற்கான பயணக் கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் மக்களை ஏற்றிச்செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே தனது மண்டலங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரயில்கள் இயக்க குறைந்தபட்சம் 90 சதவீத ஆக்கிரமிப்பு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது போன்ற ரயில்களின் டிக்கெட்டுகளை உள்ளூர் மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்து. பயணக் கட்டணத்தை வசூலித்து மொத்த தொகையை ரயில்வேயிடம் அவர்கள் ஒப்படைப்பார்கள் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

மாநில அரசு உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீர் புட்டியை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாள், குஜராத்தின் சூரத் நகர் ரயில் நிலையத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் உத்தரப் பிரதேசம் செல்ல ரூ. 800 எனப் பயணக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் புலம்பெயர் தொழிலாளி சோனிகா கூறும்போது "நான் ரூ.800 கொடுத்து பயணச் சீட்டு பெற்றேன். ஆனால் எனக்கும் வெறும் சாதமே உணவாக வழங்கப்பட்டது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "பயணச் சீட்டில் ரூ.630 என இருக்கும்போது நாங்கள் ஏன் இவ்வளவு கொடுக்க வேண்டும் எனக் கேட்டோம், கொடுத்தால்தான் ஊருக்குப் போக முடியும் என்றார்கள் எங்களுக்கும் வேறு வழியில்லை" என்றார்.

சுபாஷ் என்ற மற்றொரு தொழிலாளி கூறியபோது "நாங்கள் மொத்தமாகப் பணத்தைக் கொடுத்துவிட்டோம். பின்பு பேருந்து மூலம் எங்களை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பேருந்திலேயே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அவர்கள் நிச்சயம் ரயில்வே அதிகாரிகள் இல்லை இடைத்தரகர்களாக இருக்கலாம்" என்று சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து உத்தரப் பிரதேச அரசிடம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புகாரளித்துள்ளனர். மத்திய அரசு வழிமுறைகள் வெளியிட்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் மோசடியில் சிலர் ஈடுபட்டது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com