காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு பார்ட்டியில் கலந்து கொண்டு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனது பத்திரிகையாளர் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளுக்கு ராகுல் காந்தி சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் முடிந்ததும் அங்கு பிரம்மாண்ட பார்ட்டிக்கு (கேளிக்கை விருந்து நிகழ்ச்சி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டிருக்கிறார்.
அவர் பார்ட்டியில் இருக்கும் வீடியோவை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளா். அந்த வீடியோவில் ஒரு பெண்ணுடன் ராகுல் பேசிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. வெறும் 12 நொடிகள் மட்டுமே இந்த வீடியோ உள்ளது.இதனிடையே, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்து வருகிறது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறும்போது, "காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கும் சமயத்தில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு பார்ட்டில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் தனது தலைமை பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்காத சூழலில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.