உதவிக்கரம் நீட்டிய நேயர்களுக்கு புதிய தலைமுறை நன்றி
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 3 நாள்களில் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பில் நிவாரணப் பொருள்களை புதிய தலைமுறை நேயர்கள் வழங்கியுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தின் மறுவாழ்வுப் பணிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொருட்டு, புதிய தலைமுறை நேயர்களிடம் இருந்து நிவாரணப் பொருள்கள் பெறப்பட்டன. புதியதலைமுறையின் சென்னை அலுவலகம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை அலுவலகங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரணப் பொருள்கள் பெறப்பட்டன. கடந்த 3 நாள்களில் ஏராளமான நேயர்கள், புதியதலைமுறை அலுவலகங்களுக்கு வந்து தங்களால் இயன்ற நிவாரணப் பொருள்களை வழங்கினர். பாய், தலையணை, புதிய ஆடைகள், நேப்கின்கள், அரிசி, மளிகைப் பொருள்கள், மருந்துகள் என ஏராளமான உதவிப் பொருள்களை வழங்கினர்.
கடந்த 3 நாள்களாக நடைபெற்ற முகாம் செவ்வாய்க்கிழமை மாலையோடு நிறைவடைந்தது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறுசீரமைப்பது, பள்ளி, நூலகங்களை புனரமைப்பது போன்ற கேரள அரசின் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வகையில், புதிய தலைமுறை நேயர்கள் பலர் தங்களால் ஆன நிதியுதவியை வரைவோலையாகவும், காசோலையாகவும் அளித்து வருகின்றனர். நிதியுதவி பெறும் பணி வரும் 24ம் தேதி வரை நடைபெறும்.