100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடக்கம் முதலே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தற்போது கொரோனாவின் 2-வது அலை நாட்டில் வேகமெடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியையே பேராயுதமாக கருதி மத்திய-மாநில அரசுகள் இந்த பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களின் தலைவர்கள், உறுப்பினர்களுடன் முதலமைச்சர் அமரிந்தர் சிங் நேற்று காணொலி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், கொரோனாவை முற்றிலுமாக வேரறுக்கும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் 100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ.10 லட்சம் சிறப்பு மேம்பாட்டு நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.