விபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்

விபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்
விபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்

பஞ்சாப் ரயில் விபத்து குறித்து காவல் துறை ஆணையர் தலைமையில் விரிவான விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் அமரிந்தர் சிங் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். விபத்து குறித்து காவல் துறை ஆணையர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். ரயில் விபத்தில் 59 பேர் இறந்துள்ளதாகவும் இதில் 9 பேர் உடல் மட்டு்ம இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

துயரம் நிறைந்த இந்த சமயத்தில் விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்து பரஸ்பர குற்றச்சாட்டுகள் வேண்டாம் என்றும் விசாரணை அறிக்கையில் உண்மை தெரியவரும் என்றும் முதல்வர் தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவையில் உள்ள அனைவரும் அமிர்தசரஸ் வந்து சீரமைப்பு, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, அமிர்தசரஸில் ரயில் பாதைக்கு அருகே ராம்லீலா நிகழ்வை நடத்திய தசரா விழாக் குழுவினர் உரிய அனுமதியை பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தசரா விழாவிற்கு காவல்துறையினரிடம் தடையில்லாச் சான்று கோரி விண்ணப்பித்தாகவும், அப்போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அமிர்தசரஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றிடமும் உரிய அனுமதியைப் பெற அறிவுறுத்தியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் விழாவை நடத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ரயில்பாதை அருகே நிகழ்வை நடத்த அனுமதி வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com