நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளது. இதை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நீரவ் மோடி 280 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக தங்களிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஜனவரி 29ம் தேதி தங்களிடம் புகார் தெரிவித்ததாகவும் ஆனால் அதற்கு முன்பே அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். நீரவ் மோடி சுவிட்சர்லாந்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த மாதம் உலக பொருளாதார சபை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து தொழிலதிபர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்படத்தில் பிரதமர் மோடியுடன் நீரவ் மோடியும் இருப்பதால் அவர் சுவிஸ்ஸில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில் நீரவ் மோடியை தேடப்படும்நபராக அறிவித்து அவரை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு விமான நிலைய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் நீரவ் மோடி வெளிநாடு சென்றுள்ளதை இன்னும் உறுதி செய்யவில்லை.
நீரவ் மோடி மீதான புகார் தொடர்பாக மும்பை, சூரத், டெல்லி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.