60 நாட்கள்.. தினம் 9 மணி நேரம் தூக்கம்.. ரூ.9 லட்சத்தைத் தட்டிச் சென்ற இளம்பெண்!
ஒரு மனிதர் புத்துணர்வு பெறுவதற்கும், அவரது உடல் சரியாக இயங்குவதற்கும் தூக்கம் என்பது அவசியமாகும். ஆகையால், எல்லா மனிதர்களும் அயர்ந்து தூங்கி எழுந்தாலே, உடல் புத்துணர்ச்சி பெற்றுவிடும். அப்படி உறங்கி எழுவதற்காகவே ஒரு விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது. அதில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற புனேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாம்பியனாகி இருப்பதுடன், ரூ.9 லட்சம் பரிசுத்தொகையையும் வென்று அசத்தியிருக்கிறார். எப்படி அதில் அசத்தினார், அதன் பின்னணி என்பது குறித்து இங்கு அறிவோம்.
தூக்கமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேக்ஃபிட் நிறுவனம் சார்பில் ஸ்லீப் இண்டர்ன்ஷிப் நான்காவது சீசன் தொடங்கியது. 60 நாட்கள் நடைபெற்ற இந்த தூக்கப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள நாடு முழுவதிலுமிருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். இறுதியில், 15 பேர் கலந்துகொண்டனர்.
இதில் புனேவைச் சேர்ந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்ற பூஜா மாதவ் வவஹலும் ஒருவர். இந்தப் பயிற்சி முகாமில் ’தூக்கப் பயிற்சியாளர்கள்’ என அழைக்கப்படும் பங்கேற்பாளர்கள், 60 நாட்களுக்குத் தொடர்ந்து 9 மணி நேர தரமான தூக்கத்தைப் பெறும் திறனுக்குச் சோதிக்கப்பட்டனர். மேலும், பங்கேற்பாளர்களுக்கு வேக்ஃபிட் (Wakefit) மெத்தைகள் மற்றும் அவர்களது தூக்க முறைகளைக் கண்காணிக்க நவீன சாதனங்கள் (contactless sleep monitoring) வழங்கப்பட்டன. கண்காணிப்புடன், ஆரோக்கியமான, நிம்மதியான பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் பயிலரங்குகள் மற்றும் தூக்கம் தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள், சிறு போட்டிகள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இறுதியில், இந்த விழிப்புணர்வுப் போட்டிப் பயிற்சியில் 91.36 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த பூஜா மாதவ், ‘ஸ்லீப் சாம்பியன் ஆஃப் தி இயர்’ என்ற பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.9.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மற்ற போட்டியாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.