“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது” - புதுவை முதல்வர்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு எனப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியின், ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, துணை நிலை ஆளுநர் சார்பில் அவரது தனிச்செயலர் ஸ்ரீதரன் தாக்கல் செய்த பதில் மனுவில், புதுச்சேரியின் நிர்வாக அதிகாரியே துணை நிலை ஆளுநர்தான் என்றும், நிர்வாக ரீதியாக துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளில் குற்றம் காண முடியாது என்பதால், மனுவைத் தள்ளுபடி செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுதாரரின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அரிதிலும் அரிதான அரசின் நடவடிக்கைகளில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும் என்றும், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது என்றும் சுட்டிக்காட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், யூனியன் பிரதேச சட்டப்படி, துணைநிலை ஆளுநர் நிர்வாகியாக செயல்படுவதால், அரசு ஆவணங்களை ஆராய அவருக்கு முழு அதிகாரம் உண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிபதி மகாதேவன் தீர்ப்பளித்தார். அதாவது புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என உயர்நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது எனவும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“துணைநிலை ஆளுநர் எந்த உத்தரவும் போடமுடியாது, அவருடைய செயல்பாடுகள் மாநில வளர்ச்சிக்குதான் சாதகமாக இருக்க வேண்டும். நிதி நிர்வாகம்,சட்ட ஒழுங்கு, அதிகாரிகள் மாற்றம் குறித்த முழு அதிகாரமும் மாநில அரசுக்குதான் உண்டு எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இந்தத் தீர்ப்பே இறுதியானது” என நாராயணசாமி தெரிவித்தார்.