
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற 5 சட்டப்பேரவை உறுப்பினர்களின் திடீர் ராஜினாமா தான் இதற்கு காரணம். அதோடு சேர்த்து காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ள திமுக எம்.எல்.ஏ ஒருவரும் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்தடுத்த ராஜினாமாக்களை அடுத்து தற்போது புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சட்டப்பேரவையில் உள்ள பலத்தை பார்ப்போம்.
காங்கிரஸ் - 9
உழவர்கரை, இலாசுப்பேட்டை, காலாபட்டு, நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், திருநள்ளார் ஆகிய 9 தொகுதிகளில் மட்டுமே தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2016 தேர்தலில் 15 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவரது பதவி கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் - 7
பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டுள்ளது. மண்ணாடிப்பட்டு, திருபுவனை, மங்கலம், கதிர்காமம், இந்திரா நகர், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு ஆகிய ஏழு தொகுதிகள் அடங்கும்.
திமுக - 2
காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக-விற்கு உருளையன்பேட்டை, நிரவி திருமலைராயன்பட்டினம் என இரண்டு தொகுதிகளில் உறுப்பினர்கள் உள்ளனர்.
அதிமுக - 4
முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, உப்பளம் மற்றும் காரைக்கால் தெற்கு என நான்கு தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது.
சுயேட்சை - 1
இது தவிர மாகே தொகுதியில் கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை உறுப்பினர் ராமச்சந்திரன் அரசுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.
நியமன எம்.எல்.ஏக்கள் - 3
பாஜகவை சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி மற்றும் விக்ரமன் என மூன்று பேர் நியமன எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.
இந்நிலையில் தான் நாளை ஆளும் காங்கிரஸ் கூட்டணி தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க நிர்பந்தித்துள்ளார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.