புதுச்சேரி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் திட்டம்?
புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
புதுச்சேரியில் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்று சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
இதனையடுத்து ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கொடுத்த நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும் போது, "ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கேட்டுக்கொண்டோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான். நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினால் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வோம் எனத் தெரிவித்தார். இதனிடையே புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவை ஆளுநர் தமிழிசை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

