மாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்

மாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்
மாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்

கேரளாவில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்னதாக காணாமல் போன கல்லூரி மாணவி ஜேஸ்னா, பெங்களூருவில் மே 5-ஆம் தேதி காணப்பட்டதாக போலீசாருக்கு ஒரு புது தகவல் கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜேஸ்னா. இவர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி புஞ்சவயல் பகுதியில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்கு செல்வதாக வீட்டை விட்டு கிளம்பியிருக்கிறார். அத்தை வீட்டுக்கும் ஜேஸ்னா வீட்டுக்கும் சுமார் 20 கி.மீ தூரம் இருக்கும். 3 பேருந்துகள் மாறித் தான் செல்ல வேண்டும். ஜேஸ்னா, அத்தை வீட்டிற்கு வழக்கமாக செல்வதுதான். அதுபோலதான் மார்ச் 22ம் தேதியும் சென்றிருக்கிறார். ஆனால் அவர் அத்தை வீட்டை அடையவில்லை. இதுகுறித்து ஜேஸ்னாவின் குடும்பத்தார் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். கடந்த 4 மாதத்திற்கும் மேலாக பல இடங்களில் போலீசார் ஜேஸ்னா குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இன்றுவரை ஜேஸ்னாவை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து திருவல்லா டிஎஸ்பி சந்திரசேகர் கூறும்போது, “காணாமல் போன ஜேஸ்னா கடந்த மே 5-ஆம் தேதி பெங்களூருவில் காணப்பட்டதாக எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பெங்களூருவுக்கு சிறப்பு படை அனுப்பப்பட்டுள்ளது” என்றார். பெங்களூரு சென்றுள்ள சிறப்பு படையினர் அங்கு பல இடங்களில் தேடியும் ஜேஸ்னாவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முன்னதாக ஜேஸ்னா குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, கேரளாவின் முண்டகாயம் பகுதியில் உள்ள கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில் மார்ச் 15-ஆம் தேதி ஜேஸ்னா முக சாயலில் உள்ள ஒரு பெண் அந்தக் கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது. இது ஜேஸ்னாவாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இருந்தாலும் போலீசார் அது ஜேஸ்னா என்று உறுதி செய்யவில்லை. அதேபோல ஜேஸ்னா குடும்பத்தினரும், அது ஜேஸ்னா இல்லை என தெரிவித்தனர். சிசிடிவி காட்சியில் அப்பெண் இரண்டு பைகளுடன் நடந்து சென்றது தெரியவந்தது.
 ஜேஸ்னா வீட்டை விட்டு கடைசியாக சென்றபோதும் கூட, இரண்டு பைகளுடன் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் தான் சிசிடிவி காட்சியில் இருந்தது ஜேஸ்னா என போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இந்நிலையில் தற்போது ஜேஸ்னா போன்று ஒருவர் பெங்களூருவில் மே 5-ஆம் தேதி காணப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதால் போலீசார் அங்கு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே மலையாள தொலைக்காட்சிகள், இதுகுறித்து ஜேஸ்னாவின் உடன் படிக்கும் ஆண் நண்பர் ஒருவரை போலீசார் விசாரித்ததாக செய்திகள் வெளியிட்டிருந்தன. அதேபோல ஜேஸ்னா பல முறை தன் ஆண் நண்பருக்கு தொலைபேசியில் அழைத்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆண் நண்பருக்கு கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தியில், நான் சாகப்போகிறேன் என அனுப்பியதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 4 மாதங்களாக கண்டுபிடிக்க முடியாததால் ஜேஸ்னா விவகாரம் போலீசாருக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com