திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை ! நடந்தது என்ன ?
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் லாரி ஒட்டுநர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்ட நால்வரும், அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைபராபாத் காவல் ஆணையர் சஞ்சனர், கொடூரமான அந்த கொலை சம்பவம் எப்படி நடந்தது என விவரித்தார். கொல்லப்பட்ட பிரியங்கா ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவரான இவர், கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்படும் பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக கொல்லூருக்குச் செல்வது வழக்கம். சம்பவம் நடந்த 27ஆம் தேதி அவசர பணிக்காக மருத்துவமனை செல்ல சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்தருக்கிறார்.
6 மணியளவில் அங்கு வண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற பிரியங்காவை, முகமது அஷாவின் கும்பல் நோட்டமிட்டிருக்கிறது. ஏற்கெனவே மதுபோதையில் இருந்த அவர்கள், குரூர புத்தியால் சதித்திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார்கள். அதன்படி பிரியங்காவின் இருசக்கர வாகனத்தின் பின்பக்க டயரை பஞ்சராக்கிய கும்பல், அவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது. இரவு ஒன்பது இருபது மணிக்கு சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த பிரியங்கா, இருசக்கர வாகனத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டார். வண்டி பஞ்சர் ஆகியிருப்பதால் அதை தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்டார்.
அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுநர் முகமது அஷாவும், கிளீனர் சிவாவும் உதவுவதாக கூறி பிரியங்காவை ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கு சின்னகேசவலு, நவீன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறுகிறார், காவல் ஆணைர் சஞ்சனர். பிரியங்காவின் உடலை தார்பாயில் சுற்றி லாரியில் போட்டு எடுத்துச் கொண்டு கட்டபள்ளி என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள பாலத்தின் அடியில் வைத்து பிரியங்காவின் சடலத்தை தீயிட்டு கொளுத்திய நால்வரும், தப்பிச் சென்றுள்ளனர். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும் தான் குற்றத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்திருக்கிறது சைபராபாத் காவல்துறை.