சாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா
உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ராவில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் சொத்து தொடர்பான பிரச்சனையால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. 2 கோஷ்டிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 18-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் இன்று 24 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இன்று சென்றார். அப்போது அவரை அங்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீசார் தடுத்தனர். இதையடுத்து அவர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அவர் கூறும்போது, ‘’பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பார்க்க செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டேன். என்னுடன் நான்கு பேரை மட்டுமே அழைத்துச் செல்வேன் என்றும் கூறிவிட்டேன். ஆனால், நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துவிட்டனர். ஏன் அனுமதிக்க முடியாது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். அதுவரை இங்கு அமைதியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

