சிறை அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தாரா சசிகலா? கிளம்பும் பகீர் புகார்!
சிறையில் தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு சலுகைக்களுக்காக, சசிகலா சிறைத்துறை அதிகாரிக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து வந்தனர்.
இந் நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறை பெண் அதிகாரியாகப் பதவியேற்ற டி.ஐ.ஜி. ரூபா, சிறையில் திடீர் சோதனை நடத்தினார். கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ், இந்த திடீர் சோதனை தொடர்பாக, டி.ஐ.ஜி. ரூபாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி அவருக்கு டி.ஐ.ஜி. ரூபா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த 10 ம் தேதி சிறையில் ஆய்வு செய்தேன். கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. மேலும், சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. சிறை விதிமுறைப்படி இது தவறு. இதற்காக, தங்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தாங்கள் பணம் பெறாவிட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறைத்துறை டி.ஐ.ஜி. என்ற முறையில் சிறையில் ஆய்வு செய்ய எனக்கு உரிமையுள்ளது. அதன்படி ஆய்வு செய்துள்ளேன். இதுபற்றி விசாரணை நடத்தி பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.