28 சதவிகித உச்சபட்ச ஜிஎஸ்டி பிரிவில் 34 சொகுசுப் பொருட்களே இப்போது உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. முன்னர் பேசிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி விதிப்பில் 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார். நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
பின்னர், ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் விவரங்களை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளியிட்டார். அதாவது, “28 சதவிகித ஜிஎஸ்டி பிரிவில் இருந்த 7 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிமெண்ட்டுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. உயர் வருமான பிரிவினர் பயன்படுத்தக்கூடிய டிஷ் வாஷர் போன்ற ஒரு சில பொருட்களே 28% பிரிவில் உள்ளன. சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டு வந்துள்ளன. டிவி உள்ளிட்ட சில
மின்னணு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டுள்ளன. 28 சதவிகித உச்சபட்ச ஜிஎஸ்டி பிரிவில் 34 சொகுசுப் பொருட்களே இப்போது உள்ளன. சூரிய மின் உற்பத்தி கருவிகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
மேலும் தங்க நகை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் தங்கம் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்தது கவுன்சில். ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் முதல்வர்கள் பெறும் பரிசு பொருட்கள் ஏலத்தின் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக இறக்குமதி செய்யப்படும் தனியார் வாகனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.