தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்
உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் எனவும் அதுவரை கைது செய்ய தடையில்லை எனவும் நீதிபதி ரமணா தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்லாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ப.சிதம்பரம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா,உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது எந்த பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.