ஸ்ட்ரெச்சரில் கர்ப்பிணி பெண்ணை வைத்து ஆற்றைக் கடந்த உறவினர்கள்
ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர் உறவினர்கள்.
ஒடிஷா மாநிலத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காத நிலை தொடர்வதால், பழங்குடி இனமக்கள் வாழும் பகுதிகளில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் இறந்தவர் சடலங்களை பல கிலோ மீட்டர் சைக்கிளிலும் தோளிலும் சுமந்து செல்லும் அவலக் காட்சிகள் ஒடிஷாவில் அதிகம். இப்போது ராயகடாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராயகடா மாவட்டம் கல்யாண்சிங்பூர் தாலுகாவில் தலசாஜா கிராமத்தைச் சேர்ந்த அன்கு மினியகா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கல்யாண்சிங்பூரில் ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால், கர்ப்பிணிப் பெண்ணை, உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமந்து கொண்டே நகபாலி ஆற்றைக் கடந்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பல போராட்டங்களுக்கு பின் மருத்துவமனையை அடைந்த இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் ஒடிஷா செய்தி தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.