கோவா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

கோவா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்
கோவா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

கோவா மாநிலத்தின் 14வது முதல்வராக பா.ஜ.கவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று சுயேச்சை மற்றும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.



இந்நிலையில் கோவா மாநிலத்தின் முதலமைச்சராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார்; இதற்கான பதவியேற்பு விழா கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் உள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர்கள் பதவி ஏற்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டதை போல் கோவா மாநிலத்தின் பதவியேற்பு விழாவும் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவா மாநிலத்தின் முதலமைச்சராக பிரமோத் சாவந்திற்கு அம்மாநில ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து கோவா மாநிலத்தின் அமைச்சர்களாக விஸ்வஜீத் ரானே, மவுவின் கோடின்ஹோ, ரவி நாயக், நிலேஷ் கப்ரால், சுபாஷ் ஷிரோத்கர், ரோஹன் கவுண்டே, அதனாசியோ மான்செரேட் மற்றும் கோவிந்த் கவுடே உள்ளிட்ட 8 பேர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை ஏற்றுக்கொண்டனர்.


பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கோவா மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மேடையிலே தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com