இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை 'காலிஸ்தான்' என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. காலிஸ்தான் ஆதரவாளர்கள் என அழைக்கப்படும் இவர்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் இந்திய துணை துாதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்த சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது. அதற்கடுத்த படியாக தற்போது, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 'Kill India' என்று குறிப்பிட்டு பேரணிக்கு அழைப்பு விடுக்கும் போஸ்டரை காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் வைத்துள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பல அடையாளம் தெரியாத நபர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் பத்துக்கும் குறைவான பின்தொடர்பாளர்களையே கொண்டிருக்கின்றனர். அந்தக் கணக்குகள் அனைத்தும் கடந்த ஜூன் மாதம் உருவாக்கப்பட்டவையாக உள்ளன. அவர்கள் ஒரே ட்வீட்டைப் பகிர்ந்து 'ஜூலை 8ஆம் தேதி கில் இந்தியா' பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இந்தப் பேரணியை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்திய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் பலரது பெயரையும் தங்கள் பதிவில் 'டேக்' செய்துள்ளனர். அவர்களின் பதிவில் ஜூலை 8ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் சுதந்திரப் பேரணி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்திற்கான இந்திய தூதரக அதிகாரிகள் விக்ரம் துரைசாமி மற்றும் பர்மிங்காமில் உள்ள இந்திய தூதரக அதிகாரி டாக்டர் ஷஷாங்க் விக்ரம் ஆகியோரின் படங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றவர்கள் என்று அவதூறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.