புலம்பெயர்ந்த தொழிலாளர்களை துன்புறுத்திய உ.பி போலீஸ் - வலுக்கும் கண்டனம்
உத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தவளைபோல தாவிச்செல்லுமாறு கூறிய போலீஸாருக்கு எதிராக கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் எனும் கொடூரத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரது வாழ்க்கையும், வாழ்வாதாரமும் முடங்கியுள்ளன. இதில் பெருந்துயரத்தை சந்தித்து வருவது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான். பிழைப்புக்காக வேறு மாநிலங்கள் சென்ற அவர்கள், ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊரும் திரும்ப முடியாமல், வேலையும் இல்லாமல் பரிதாப நிலையை அடைந்துள்ளனர். பலரும் தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலரை உத்தரப் பிரதேசத்தின் பாடாவுன் போலீஸார் நடத்திய விதம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏனென்றால் சாலையில் நடந்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலரை தண்டிக்கும் விதமாக, தவளைப்போல தாவிச் செல்லுமாறு பாடாவுன் போலீஸார் துன்புறுத்தியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவ, சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்தால், இப்படியா கொடுமை செய்வீர்கள் ? இதை முற்றிலும் ஏற்க முடியாது எனவும் அவர்கள் சாடியுள்ளனர்.

