சபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளதால் கேரள மாநில காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சபரிமலையில் நாளை பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும், இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவியத் தொடங்கவுள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. இந்த பூஜையையொட்டி ஐயப்ப பக்தர்கள் சுமார் 18 லட்சம் பேர் நாளை சபரிமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வந்த பக்தர்கள் கூட்டத்தை ஒப்பிட்டு இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையின் பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் கூறும்போது, 6000 அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க நியமிக்கபட்டிருப்பதாக தெரிவித்தார். அத்துடன் போக்குவரத்தை சீர்படுத்துவது, காணாமல் போகும் நபர்களை மீட்பது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பது, திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் அந்த அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதனை கட்டுப்படுத்தும் பணியை அவர்கள் மேற்கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மற்றொரு அதிகாரி கூறும், வனப்பகுதி வழியாக நடந்து வரும் பக்தர்களை, பயங்கரவாத அமைப்புகள் தாக்காத வகையில் அங்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை பொறுத்தவரையில் நிலக்கல்லிற்கு 7,500 வாகனங்கள் வந்துள்ளன. அத்துடன் 19,000 கார்கள் வந்துள்ளன. இதற்கிடையே கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அந்தப் பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளதால், இந்த முறை நிலக்கல்லில் பார்க்கிங் இடம் நிரம்பியதும், மீதமுள்ள வாகனங்களை வேறு இடங்களில் நிறுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் பேருந்துகள் மூலம் வரும் பக்தர்களுக்காக தொடர் பேருந்து இயக்கம் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.