ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகள்: ஆரத்தி எடுத்து மலர் தூவிய போலீசார்!
ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் ஆரத்தி எடுத்தனர்.
கொரோனா நோய் பரவலைத் தடுக்க கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து 5 நபர்களுக்கு மேல், வெளியில் கூட தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவையை மீறி வெளியே வருபவர்களின் வாகனத்தில் மஞ்சள் சாயம் பூசுவது, வாகனத்தை சைட் லாக் பண்ணிவிட்டு எட்டுப் போடச் சொல்வது எனப் பல நூதன தண்டனைகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்தும் ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கான்பூரில் ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் ஆரத்தி எடுத்தனர். ஊரடங்கு தடையை மீறியவர்களை வரிசையாக நிற்க வைத்த போலீசார் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பூக்களை தூவினர். பின்னர் ஒவ்வொருவருக்கும் வாழைப்பழமும் வழங்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.