எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட கவிஞர் வரவர ராவுக்கு 6 மாதங்கள் நிபந்தனை ஜாமீன்!

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட கவிஞர் வரவர ராவுக்கு 6 மாதங்கள் நிபந்தனை ஜாமீன்!
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட கவிஞர் வரவர ராவுக்கு 6 மாதங்கள் நிபந்தனை ஜாமீன்!

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆந்திராவின் பிரபல கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு 6 மாதங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது மும்பை நீதிமன்றம்.

கடந்த 1818 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் பேஷ்வா படையினருக்கும் பட்டியல் இன மக்கள் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பட்டியில் இன மக்கள் வெற்றி பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வெற்றி நிகழ்வை பட்டியல் இன மக்கள் பெரும் விழாவாக கொண்டாடுவதோடு உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் விதத்தில் நினைவுத்தூணுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். அப்படித்தான், இந்நிகழ்வின் 200 வது ஆண்டையொட்டி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ’எல்கர் பரிஷத்’ மாநாடு நடைபெற்றது. பட்டியல் இன மக்களின் எழுச்சியைக் கொண்டாடும் இந்த மாநாட்டில் இந்தியா முழுக்க உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். ஆனால், அதற்கு அடுத்த நாள் ஜனவரி 1 ஆம் தேதி இந்நிகழ்வையொட்டி எதிர்பாராவிதமாக பெரிய கலவரம் வெடித்தது. இதனால், ’எல்கர் பரிஷத்’ மாநாட்டில் மத்திய அரசுக்கு எதிராக சதி செய்ததாகக்கூறி கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட ஒன்பது சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 9 பேரில் தென்னிந்தியாவைச் சேர்ந்த வரவர ராவ் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். 

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வரவர ராவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர் சுயநினைவை இழந்ததாகவும்கூறி மருத்துவமனை சிகிச்சை அளிக்க அவரது மனைவி ஹேமலதா தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். 81 வயதாகும் அவரது விடுதலையை முன்வைத்து ட்விட்டரில் அடிக்கடி ட்ரெண்டிங்கும் ஆனது. அதோடு, கடந்த வருடம் ஜூலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரவர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரது விடுதலையை வேண்டி இந்தியா முழுக்க உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்திருந்தனர்.

 ”சரியான மருத்துவ சிகிச்சையை அரசின் காவலில் உள்ள ஒருவருக்கு அளிக்காமல் இருப்பது உயிருக்கு தெரிந்தே ஆபத்தை விளைவிப்பது” என்று பிரபல வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அவரது ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வரவர ராவின் மருத்துவக் காரணங்களுக்காக 6 மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.  சுதா பரத்வாஜ், கெளதம் நாவல்கா, அருண் பெரோரா,வெர்னோன் கொன்சால்வேஸ் உள்ளிட்ட 8 சமூக செயற்பாட்டாளர்களும் இன்னும் சிறையில்தான் உள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com