2030ம் ஆண்டில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 104வது தேசிய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய மோடி, இடையறாத கடமை மூலம் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் விஞ்ஞானிகளுக்கு நாடு என்றும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உலகத்தரத்திற்கு ஈடான ஆராய்ச்சி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த ஆராய்ச்சிகள் வளர்ந்து வரும் மனித குலத்தின் தேவைகளுக்கு தீர்வு தருவதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 2030ம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக, புதிது புதிதாக அறிமுகமாகி வரும் தொழில்நுட்பங்களின் பலன்களை நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.