\
பீரங்கி ஆலையை திறந்து வைத்து பீரங்கியில் பயணித்த பிரதமர் மோடி

பீரங்கி ஆலையை திறந்து வைத்து பீரங்கியில் பயணித்த பிரதமர் மோடி

பீரங்கி ஆலையை திறந்து வைத்து பீரங்கியில் பயணித்த பிரதமர் மோடி
Published on

குஜராத் மாநிலம் சூரத் அருகே எல் அண்ட் டி பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பீரங்கி வண்டியினுள் அமர்ந்து அவர் சிறிது தூரம் பயணித்தார். 

சூரத் நகருக்கு அருகே ஹாசிரா என்ற இடத்தில் எல் அண்ட் டி நிறுவனத்தின் K9 வஜ்ரா என்ற பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

லார்சன் & டார்போ நிறுவனம் கே 9 வஜ்ரா - 155 எம்.எம்./ 52 காலிபர் திறன் கொண்ட 100 டாங்குகளை இந்திய ராணுவத்திற்கு தயாரித்து வழங்குகிறது. இந்திய ராணுவத்திற்கு சிறிய வகை பீரங்கிகள் தயாரிப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை எல் அண்ட் டி நிறுவனம் பெற்றது. 

இந்நிலையில் இந்தத் தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து பேட்டரி காரில் அமர்ந்தபடி ஆலையை பார்வையிட்டார். பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் நிமலா சீதாராமனும் உடன் இருந்தார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, தான் பீரங்கி வண்டியினுள் அமர்ந்து பயணித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “K9 வஜ்ரா என்ற பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டதற்கு லார்சன் & டார்போ நிறுவனத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.

இது இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும். பாதுகாப்புத்துறையில் மேக் இன் இந்தியா திட்டதை வளர்க்க இது உதவும். இந்த முயற்சியில் தனியார் துறையின் பங்களிப்பும் இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தத் தொழிற்சாலையின் மூலம் இந்தியா பாதுகாப்புத்துறை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com