கறுப்பு பணம் பதுக்குவோருக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
நாட்டை கொள்ளையடித்தவர்கள் தங்களின் செயல்களுக்காக பதில் சொல்ல வேண்டி இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில், சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்டுகளுக்கான நிறுவன தின விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். நாட்டில் ஊழலை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட முதல் கட்ட நடவடிக்கை பணமதிப்பிழப்பு என்ற பிரதமர், அதன் வெற்றியால், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் அளவு குறைந்து விட்டதாகக் கூறினார். வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிரதமர் ஏற்கனவே 37 ஆயிரம் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அதே போன்று ஜிஎஸ்டி விதிப்பு முறை காரணமாக நாட்டின் பொருளாதாரம் ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதாக கூறிய மோடி, இந்தியாவில் யாரும் இனி வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்றார்.