விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி திட்டம் : தொடங்கிவைத்தார் பிரதமர்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நடப்பு ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாயை வழங்குவதை இன்று உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி டிஜிட்டல் முறையில் தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் முறையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் இன்று முதல் செலுத்தப்படவுள்ளது. அத்துடன் மூன்று விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டையையும் பிரதமர் வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 12 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

