தேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் எதுவும் பேசவில்லை.
பரபரப்பான அரசியல் சூழல் ஒருபுறம் இருக்க நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 23 சட்ட முன்வடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவு, மோட்டார் வாகன சட்டத்திருத்த முன்வடிவு போன்றவையும் இதில் அடங்கும். இவை தவிர புதிதாக 20 சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
உர்ஜித் படேல் ராஜினாமா, ரபேல் போர் விமான ஒப்பந்தம், சி.பி.ஐ. சர்ச்சை, ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக எம்.பி.க்கள் மேகதாது மற்றும் கஜா புயல் நிவாரணம் ஆகிய பிரச்னைகளை எழுப்புவார்கள் எனத் தெரிகிறது.
இதனிடையே குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் மக்களின் அனைத்து பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல தெலங்கானா, மிசோரமிலும் பாஜகவிற்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை.