
இந்திய வனப்பணி அதிகாரி மணிகண்டன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த இந்திய வனப்பணி அதிகாரி மணிகண்டன். கர்நாடகாவில் உள்ள நாகர்ஹோல் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார். ஒரு சிறு காட்டுத் தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அவர் சென்றிருந்தபோது ஒற்றை யானை ஒன்று அவரை பின்னாலிருந்து தாக்கியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் வனப்பணி அதிகாரியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய அதிகாரி மணிகண்டன், யானை தாக்கி இறந்தது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பணியின்போது இறந்த அதிகாரிக்கு, இந்த நாடே மரியாதை செலுத்துவதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். மணிகண்டனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கும் தனது அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வனங்களையும் வன உயிரினங்களையும் பாதுகாக்க அதிகாரி மணிகண்டன் ஆற்றிய பணிகளை இந்த நாடு என்றென்றும் நினைவு வைத்திருக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்த மணிகண்டனின் மனைவி சங்கீதாவுக்கு எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் தைரியத்தையும், சக்தியையும் குடும்பத்தினருக்கு அளிக்க வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.