“குற்றவாளிகள் தப்ப முடியாது” - நக்சலைட் தாக்குதலுக்கு மோடி கண்டனம்
மகாராஷ்ட்ராவில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், 15 கமாண்டோ படையினர் உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவில் கட்சிரோலி மாவட்டத்தில், கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்கு தலில் 40 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவு தினத்தை இந்த வாரம் முழுவதும் நக்சலைட்டுகள் அனு சரித்து வருகின்றனர். அதற்குப் பழிவாங்கும் விதமாக, அவர்கள் மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று தாக்குதலில் ஈடுபட்டனர்.
சாலை பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 27 வாகனங்களுக்கு அவர்கள் வைத்த தீயில் அந்த வாகனங்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகின.
இந்நிலையில், கமாண்டோ படை வீரர்கள் ஒரு வாகனத்தில் கட்சிரோலி பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நக்ச லைட்டுகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் சென்ற வாகனம் பயங்கர சத்ததுடன் வெடித்துச் சிதறியது. இதில் வீரர்கள் 15 பேர் உடல் சிதறி பலியாயினர். 20க்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கமாண்டோ படை வீரர்களுக்கும் நக்சலைட்களுக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை அங்கு நடந்துவருகிறது.
நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்ட்ராவில் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்த வீரர்களுக்கு எனது வீர வணக்கம். அவர்களின் தியாகங்கள் மறக்க முடியாதது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்ப முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.