உடல்நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுவாசப் பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி இன்று காலமானார். இதுதொடர்பாக ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அறிவுகூர்மை மிக்க வழக்கறிஞர், சிறந்த நாடாளுமன்றவாதி மற்றும் தனித்துவமான அமைச்சராக பல்வேறு களங்களில் பணியாற்றியவர் என்றும், தேச கட்டமைப்பில் அவரது பங்கு இன்றியமையாததாக அமைந்திருந்தது என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாட்டுக்கும், கட்சிக்கும் மிகப் பெரிய பேரிழப்பு என்றும், தனிப்பட்ட முறையில் தனக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், பாரதிய ஜனதாவும், அருண் ஜெட்லியையும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒருங்கிணைந்து செயல்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை காக்க முன்னின்றவர் என்றும், பாரதிய ஜனதாவின் பிரபலமான முகமாக செயல்பட்டவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அருண் ஜெட்லியின் மறைவால், ஒரு சிறந்த நண்பனை இழந்து விட்டதாகவும், அவரது பிரிவு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும், அரசுக்கும், கட்சிக்கும் பெரும் சொத்தாக திகழ்ந்தவர் என ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.