ரயில் நிலைய போர்ட்டர்கள் எனப்படும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் நலனுக்கென ரயில் டிக்கெட்டில் கூடுதல் வரி விதிக்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.
ரயில்வேயில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக் கணக்கு தொடங்கி பணம் செலுத்தும் வகையில் ரயில் டிக்கெட்டில் 10 காசு கூடுதல் கட்டணம் வசூலிக்க கேட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நல அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு டிக்கெட்டுக்கு 10 காசு என்பது பயணிகளுக்கு கூடுதல் சுமையாக இருக்காது என்ற நிலையில், அவர்களது சுமையைத் தூக்கும் தொழிலாளர்களுக்கு சுமைதாங்கியாக அமைய வாய்ப்புள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தரப்பிலும் கூறப்படுகிறது.