இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன? எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன? எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன? எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, உலகம் முழுவதும் 48 கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அதிலே 11 இறுதி கட்ட சோதனையில் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவில் எந்தெந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் எப்போது இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் தற்போது பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றிலே ஆக்ஸ்போர்ட்-ஸ்ட்ராசெனிகா ஆராய்ச்சியில் இந்திய நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் ஒத்துழைப்போடு கோவிஷீல்ட் என்கிற தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் சோதனையில் பங்கு பெற்ற ஒருவர் இந்த தடுப்பூசி காரணமாக வேண்டத்தகாத பல பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்து இருந்தாலும், தற்போது இறுதி கட்ட சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அதேசமயத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் ஹைதராபாத் நகரில் கோவாக்ஸின் என்கிற பெயரில் தடுப்பூசி ஆராய்ச்சி நடத்தி, தற்போது சோதனைகள் செய்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் என்கிற தனியார் நிறுவனம் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் என்கிற தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த தடுப்பூசி தொடர்பான சோதனைகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிரிட்டன் நாட்டிலே ஒப்புதல் கிடைத்திருக்கிறது. விரைவிலேயே பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி இருக்கிறார். ஆகவே பிரிட்டன் நாட்டிலே இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதை தவிர மாடர்னா நிறுவனமும் தடுப்பூசியை இறுதி கட்ட சோதனைகளில் தற்போது விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறது.

நோவாக்ஸ் நிறுவனம் இந்தியாவில் சிரம் இன்ஸ்டியூட் மற்றும் ஐ சி எம் ஆர் கூட்டணியுடன் கோவாக்ஸ் என்கிற பெயரிலேயே தடுப்பூசி தயாரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இப்படி பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசும் தடுப்பூசி ஆராய்ச்சியை ஊக்குவித்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் தனித்தனி முயற்சிகளாக கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதிலே 5 தற்போது இறுதி கட்ட ஆராய்ச்சிகள். இந்த முயற்சிகளில் மூன்று இறுதிக் கட்டங்களில் இருப்பதாக தகவல் அரசுக்கு அளிக்கபட்டுள்ளது.

இந்திய அரசு இத்தகைய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதைத்தவிர 2021 ஆம் வருடத்திலேயே தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. இதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் முழுமையாக இந்த பெருந்தொற்றை ஒழிக்க முடியும் எனவும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவிலேயே தற்போது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர கூடிய சூழ்நிலையில் உள்ள உலக அளவிலான தடுப்பூசிகளிலே ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றிகரமாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு இருந்தாலும் இதை மைனஸ் 18 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலேயே பதப்படுத்தி வைத்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது அவ்வளவு சுலபமாக இருக்காது எனக் கருதப்படுகிறது. இதையும் விட கடினமானது பைசர் தயாரித்து வரும் தடுப்பூசியை கையாள்வது என்கிறார்கள் மருத்துவ துறையை சார்ந்தவர்கள்.

பயோ-ன் -டெக் என்ற நிறுவனத்துடன் கூட்டாக பைசர் தயாரித்திருக்கும் தடுப்பூசியை -20 டிகிரி சென்டிகிரேட்லிருந்து -90 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் பதப்படுத்த வேண்டும். இது அவ்வளவு சுலபம் அல்ல.

அதேபோலவே மோடெனாவின் தடுப்பூசி மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைத்திருந்தால்தான் சரியாக செயல்படும். இந்தியாவை பொருத்தவரை நாட்டின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் தடுப்பூசியை அனுப்பும்போது இந்த அளவுக்கு குளிர்பதனப்படுத்துவது என்பது கடினம் என கருதப்படுகிறது.

ஆகவே தான் தற்போது இந்தியாவிலேயே வெற்றிகரமாக பயன்படுத்தக்கூடிய அளவுக்கு 2 டிகிரி சென்டிகிரேடு லிருந்து 8 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைத்து பதப்படுத்தகூடிய ஆக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி தகுந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கோவிஷீல்டு என்கிற பெயரிலேயே சிரம் இன்ஸ்டியூட் நிறுவனத்துடன் தற்போது இறுதி கட்ட சோதனைகளில் இருக்கும் இந்த தடுப்பூசி விலையும் மற்ற தடுப்பூசிகளை விட குறைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 1000 ரூபாய் என்ற அளவில் இந்த தடுப்பூசி செலவு கட்டுக்குள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆகவேதான் மத்திய அரசு எந்த தடுப்பூசியை விரைவாக கிடைக்கிறது, எந்த தடுப்பூசியை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்காது, எந்த தடுப்பூசி வெற்றிகரமாக இருக்கும் என்று பல்வேறு பரிசீலனைகளை செய்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், ஆக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஸினிகா தடுப்பூசி தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் அதிக விலை இல்லாமலும், அதிக நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் பயன்பாட்டுக்கு வர கூடியதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.

சீனா உள்ளிட்ட நாடுகளும் பல்வேறு தடுப்பு ஊசி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்திலே இந்தியாவிலும் வரும் நாட்களில் பல புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுகிறது. கொரோனா வைரஸ் பரவல் தொடங்கி ஒரு வருடத்துக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதிலே இந்திய அரசு எந்த அளவு ஒருங்கிணைப்பில் ஈடுபட உள்ளது என்பதும் மாநில அரசுகளுக்கு இதிலே என்ன பங்கு இருக்கும் என்பதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

- கணபதி (டெல்லி செய்தியாளர்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com