எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உடனடி முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய மாநிலங்களவை கூட்டத்தின் போது, சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்தார். இம்மசோதாவில் ஆட்சேபிக்கத்தக்க பல அம்சங்கள் உள்ளதாகவும், எனவே இதை மாநிலங்களவையின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி பரிசீலிக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முத்தலாக் மசோதாவை அமலாக்குவதில் காங்கிரஸ் தடைக்கல்லாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இரு தரப்பும் மாறிமாறி குற்றஞ்சாட்டியதால் மாநிலங்களவை இன்று 4வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் கூடிய கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முத்தலாக்கை தடை செய்யும் மசோதாவிற்கு ஏற்கனவே மக்களவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.