எல்லா பாடத்திலும் பெயில்.. பெற்றோர் செய்த அதிர்ச்சி செயல்!
தேர்வில் வெற்றி பெற்றால் கொண்டாடுவதை பார்த்திருப்போம். ஆனல், 10 வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் அதை கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு சம்பவம்தான் கர்நாடகாவில் நடந்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் பகல்கோட்டில் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் என்ற இளைஞர். இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். இந்தநிலையில்தான், தேர்வின் முடிகள் வெளியாகியுள்ளன. அதில் 625 க்கும் மொத்தமாகவே 200 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார்.
எல்லா பாடத்திலும் தோல்வியடைந்த அபிஷேக் பெற்றோர் என்ன கூறுவார்கள் என நினைத்து அஞ்சியுள்ளார். ஆனால், நடந்த கதையே வேறு. மகன் தேர்வில் தோல்வி அடைந்ததை எண்ணி, அபிஷேக்கை பெற்றோர் வசைபாடாமல் உடனடியாக அருகே உள்ள பேக்கரியில் கேக் ஒன்றை ஆர்டர் செய்தனர். அதில் அபிஷேக் பெற்ற மதிப்பெண்ணையும், அதன் சதவீதத்தையும் குறிப்பிட்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என தலைப்பும் வைத்திருந்தனர்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. பின்னர், அந்த கேக்கை அபிஷேக்கை வைத்தே வெட்ட வைத்து அவருக்கு பெற்றோர் ஊட்டி மகிழ்ந்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மகனை பெற்றோர் வசைபாடாமல், கேக் வெட்டி கொண்டாடியது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து அபிஷேக்கின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், "பொது தேர்வை ஒட்டி அபிஷேக் நன்றாக தான் படித்தார். தேர்வை மிகவும் கவனமாக எழுதினார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. தேர்வில் அவர் தோல்வி அடைந்து விட்டார். அவரது ஏமாற்றத்தை போக்கவே கேக் வெட்டி கொண்டாடினோம்" என தெரிவித்தார்.
அபிஷேக் கூறுகையில், அடுத்த முயற்சியில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைவதாக நம்பிக்கை தெரிவித்தார். கர்நாடகத்தில் வரும் செப்டம்பரில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மகனை வைத்து பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய காட்சி இணையத்தில் வைரல் ஆனது. அதை பலரும் பகிர்ந்தனர்.
மாணவரின் பெற்றோரது நம்பிக்கை தங்களை பரவசப்படுத்துவதாக ஒரு சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்து இருந்தனர்.