மகாராஷ்டிரா வேட்டையாடச் சென்ற இடத்தில் நண்பனை காட்டுப்பன்றி என்று தவறாக சுட்டுக்கொன்ற கிராமவாசிகள்
மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் வேட்டையாடச் சென்ற இடத்தில் நண்பனை காட்டுப்பன்றி என்று தவறாக நினைத்து சுட்டுக்கொன்ற கிராமவாசிகள்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டிற்கு வேட்டையாடுவதற்காக கிராம வாசிகள் 12 பேர் குழுவாக சென்றுள்ளனர். பிறகு காட்டிற்குள் வெவ்வேறு பகுதிகளில் பிரிந்து சென்று தங்களின் கையில் இருந்த துப்பாக்கியால் காட்டு பன்றிகளை வேட்டையாடிக்கொண்டிருந்தனர். இவர்களின் கூட்டத்தில் இருந்த சாகர் ஹடல் என்பவர், தனது துப்பாக்கியுடன் காட்டு பன்றியை எதிர் நோக்கி காத்திருக்க, அவர் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் செடிகளுக்கு இடையே சலசலப்பு கேட்டதுடன் செடிகளும் அசைந்து இருக்கிறது.
சாகர் ஹடல் தான் எதிர்பார்த்த காட்டு பன்றிதான் அது என்று நினைத்தவர் தனது கையிலுள்ள துப்பாக்கியால் சலசலத்த செடியை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அங்கிருந்தது காட்டுப்பன்றி அல்ல... இவர்களுடன் கூடவந்த கிராமவாசிகளில் ஒருவரான வர்தா என்பவர்தான் அந்த செடிகளுக்கு பின்னால் இருந்துள்ளனர். இவர் சுட்டதில், வர்தா நிகழ்விடத்திலேயே இறந்து விட, பயத்தில் கூட வந்த கிராமவாசிகள் இறந்தவரை அப்பகுதியில் மறைத்து வைத்துவிட்டு, ஏதும் நடக்காதது போல அனைவரும் அவரவர்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
இதில் வேட்டைக்கு சென்ற தனது கணவன் நான்கு நாட்களாகியும் வீடு திரும்பாததைக்கண்ட வர்தாவின் மனைவி அமிதா தனது கணவரை மீட்டு தரக்கோரி உள்ளூர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.
வழக்கை பதிவு செய்த போலிசார் வர்தாவுடன் வேட்டைக்கு சென்ற கிராமவாசிகளிடம் போலிசார் தனித் தனியாக விசாரணை செய்த சமயம், ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரணான செய்திகளை கூறியுள்ளனர். பின்னர் போலிசாரின் தீவிர விசாரணையில், சாகர் ஹடல் என்பவர் பன்றி என நினைத்து தவறுதலாக வர்தாவை துப்பாக்கியால் சுட்டதாகவும், அவரது உடலை ஒரு மரத்தடியின் கீழ் வைத்துவிட்டு அனைவரும் வந்துவிட்டதாகவும் தெரியவரவே... சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார், வர்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் நண்பர்கள் அனைவரின் மீதும் FIR பதிவு செய்து வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதில் கிராமவாசிகள் சிலர் இந்த சம்பவத்தில் வேறொருவரும் காயம் பட்டு இறந்தார் என்றும் அவரது உடலை இந்த குழுவினர் எரித்துவிட்டனர் என்று கூறியதை அடுத்து, இறந்த மற்றொரு நபர் யார் என்றும் அவர் இயற்கையில் இறந்தாரா அல்லது இது வெறும் வதந்தியா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.