இந்திய அரசின் புது அறிவிப்பு! பாகிஸ்தானுக்கு செம ஜாக்பாட்? கனவு பலிக்குமா?
செய்தியாளர் - கார்த்திகேயன்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானிடம் வர்த்தகம் செய்வதற்கு இந்திய அரசு அதிரடி தடை விதித்தது. இதனால், அங்குள்ள பொருட்களை இறக்குமதி செய்யவும், இங்கிருக்கும் உபரி பொருட்களை ஏற்றுமதி செய்யவும் முடியாது. ஆனால், இப்படியான சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் வர்த்தகம் செய்வதற்கான சூழலை, மத்திய அரசின் புதிய அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் படிப்படியாக சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 18, 2026 நிலவரப்படி, ஒரு குவிண்டால் சர்க்கரையின் விலை ரூ.4,000 முதல் ரூ.5,500 வரை உயர்ந்துள்ளது. எரிபொருள் இறக்குமதியை குறைப்பதற்காக, 20 சதவீதம் எத்தனால் கலந்த E-20 பெட்ரோல் பயன்பாட்டை இந்தியா தொடங்கியுள்ளது.
எனவே, எத்தனாலை அதிக அளவில் தயாரிப்பதற்காக, சர்க்கரை பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதனால், உணவு நுகர்வுக்கான சர்க்கரை இருப்பு குறைவதால், விலையேற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை, 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை, வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் பாகிஸ்தான் சர்க்கரை ஆலைகள் சங்கம், தங்களது உபரி சர்க்கரையை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதற்காக, தங்களது இருப்பில் உள்ள 1.2 மில்லின் டன்னுக்கும் அதிகமான சர்க்கரையை, இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய, அந்நாட்டு அரசிடம் உற்பத்தியாளர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வந்தாலும், மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்குமா? என்பது இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை. தேவையான சர்க்கரையை பாகிஸ்தானிடம் இருந்து பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா? அல்லது வேறு நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளவே அனுமதிக்குமா? என்பதை அடுத்தடுத்த நடவடிக்கைகளின் மூலமே உறுதி செய்யப்படும்..

