பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதாகும் நபர்கள்.. பிரபல யூடியூபர் குறித்து வெளியான பகீர் தகவல்கள்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. எனினும், தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான தகவல்களைச் சேகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவைச் சேர்ந்த சிலரே, உளவாளிகளாகச் செயல்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உட்பட வட இந்திய மாநிலங்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உளவுத்துறை (PIO) நிறுவனங்களுடனான அவருடைய தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனமும் (NIA) மற்றும் புலனாய்வுப் பிரிவு (IB) அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பு ஒரு பயணம் உட்பட, ஜோதி மல்கோத்ரா பலமுறை பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், சீனாவுக்கும் பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
3,77,000 சந்தாதாரர்களையும் 1,33,000 பின்தொடர்பவர்களையும் கொண்ட யூடியூபரான ஜோதி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிய எஷான் என்கிற டேனிஷ் என்பவருடன் மூலம், அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் ஷாகிர் மற்றும் ராணா ஷாபாஸ் ஆகியோரைச் சந்தித்துள்ளார். பின்னர் இந்தியா திரும்பிய பிறகு, மல்ஹோத்ரா வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகள் மூலம் செயல்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், ஹரியானா மற்றும் பஞ்சாப் முழுவதும் செயல்படும் ஒரு பறந்த உளவு வலையமைப்பின் ஒரு பகுதியாக ஜோதி இருந்துள்ளார். இதில் முகவர்கள், தகவல் தருபவர்கள் மற்றும் நிதி கையாளுபவர்கள் அடக்கம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், ”NIA தவிர, மல்ஹோத்ராவை IB மற்றும் பிற மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள்படி, அவர் தனது பாஸ்போர்ட்டை 2018இல் வாங்கினார் என்பதைக் காட்டுகிறது. இது 2028 வரை செல்லுபடியாகும். மேலும் அவர் பாகிஸ்தான், சீனா, துபாய், தாய்லாந்து, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளுக்குச் சென்றுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்கள் குறித்த கூடுதல் விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் நடவடிக்கைகளுக்கு முக்கியமான தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் உளவு நடவடிக்கைகளில் பஞ்சாபில் 8, ஹரியானாவில் 5 மற்றும் உ.பி.யில் ஒருவர் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.